சித்ரா பௌர்ணமிக்கு அனுமதி கிடையாது! கலெக்டர் உத்தரவு!
தமிழகத்தில் திருவண்ணாமலைஅருணாச்சலேஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் இந்த மாதம் வரும் சித்ரா பௌர்ணமி தினத்தில் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்து சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிரிவலம் செல்வர்.
நடப்பாண்டில் சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 26 ம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் 2.16 மணி முதல் செவ்வாய்க் கிழமை காலை 9.59 மணி வரை இருக்கிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சித்ரா பௌர்ணமியையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் யாரும் திருவண்ணாமலைக்கு வர வேண்டாம் எனவும், அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 2020 மார்ச் முதல் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.