திருமண நாளில் மணப்பெண்ணின் தம்பி கொலை.. மணமகனுக்கு போலீஸ் வலைவீச்சு !
திருமண வீடு என்றாலே கலாட்டா இடம்பெறும். அதிலும் பந்தியில் சாப்பாடு விவகாரத்தில் மோதல் கண்டிப்பாக எழும். பின்னர் அனைவரும் சமரசம் அடைவர். ஆனால் உத்தரபிரதேசத்தில் பந்தியில் உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட பிரச்னையில் மணமகளின் சகோதரர் கொலை செய்யப்பட்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆக்ரா அருகே ஃபரூக்காபாத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது உணவு பறிமாறும்போது ஏற்பட்ட பிரச்னையில் மாப்பிள்ளை மணமகளின் சகோதரனை கொலை செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உயிரிழந்தவரின் மூத்த சகோதரன் புனித்(19) கூறுகையில், இரவு 8:30 மணிக்கு மணமகன் வந்தார். அப்போது நாங்கள் அவர்களுக்கு தின்பண்டங்கள் மற்றும் தண்ணீரை வழங்கினோம்.
ஆனால் மணமகன் மனோஜ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உணவு ஏற்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர். அப்போது எங்கள் வீட்டு பெரியவர்கள் தலையிட்டபோது, அவர்கள் ஒரு நாட்டு துப்பாக்கியால் என் தாய் மாமா ராம் குமாரை நோக்கி சுட்டனர்.
மனோஜ் மற்றும் அவரது நண்பர்களுக்கு தண்ணீர் பரிமாறிக் கொண்டிருந்த எனது தம்பி பிரன்ஷு 9, அவர்களால் ஒரு எஸ்யூவியில் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்கள் காரில் தப்பி ஓடும்போது 3 பெண்கள் மீது கார் மோதியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
பிரன்ஷுவுடன் திரும்ப வருமாறு மனோஜ்க்கு பலமுறை செல்போனில் அழைத்தபோதும் அவர் வர மறுத்துவிட்டார்.
அதிகாலை 3 மணியளவில், அவர் எனது சகோதரரின் உடலை கிராமத்தில் போட்டுவிட்டு மீண்டும் தப்பி ஓடிவிட்டார். பிரன்ஷு கழுத்தில் நெறிக்கப்பட்ட வடு இருந்தது, முகங்கள் சிதைக்கப்பட்டிருந்தன எனத் தெரிவித்தார்.
கார் மோதியதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவரின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மணமகளின் தந்தை ராம்பால் ஜாதவ் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மணமகனையும், அவரது உறவினர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in