முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. இரவு முழுவதும் சோதனை.. விசாரணை.. !
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு உள்ளது. நேற்று மாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர், முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுதொடர்பாக உடனடியாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தியதில், அது புரளி என தெரியவந்தது.
பிறகு சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து, செல்போன் டவரை ஆராய்ந்தபோது அது சேலையூர் என தெரியவந்தது.
உடனடியாக அந்த முகவரிக்கு அபிராமபுரம் போலீசார் சென்று விசாரித்தபோது, மிரட்டல் விடுத்த நபர் வினோத் குமார் (38) என்பவர் தெரியவந்தது. அவரை கைது செய்து அபிராமபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக இதேபோன்று நடிகர்கள் ரஜினி, விஜய் ஆகியோர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பின்னர் சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
newstm.in