கருப்பு பூஞ்சை தாக்கிய ஊத்துக்குளி பெண் தாசில்தார் பலி..!
திருப்பூரைச் சேர்ந்தவர் கலாவதி (52). இவர், ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயர் சிகிச்சைக்கு பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்றில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, அவ்வப்போது உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. அதன்பின் நடந்த பரிசோதனையில் கருப்பு பூஞ்சை தாக்கியது உறுதியானது. மீண்டும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல், ஒரு கண் செயலிழந்தது. தொடர் சிகிச்சையில் இருந்தும், சிகிச்சை பலனின்றி கலாவதி நேற்று இறந்தார். கலாவதிக்கு, கணவரும், மகனும் உள்ளனர்.
கண்களில் வலி, கண் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கருப்பு பூஞ்சை அறிகுறியாக இருக்கக்கூடும் என்றும், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.