அதிமுகவை கழட்டிவிட்டு செயல்பட பாஜக புது வியூகம்!?
அதிமுகவுக்கு குட்பை சொல்லிவிட்டு உள்ளாட்சி தேர்தலில் புது வியூகம் வகுத்து செயல்பட தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பாஜகவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகி இருக்கிறார். அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் பாஜகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் உள்ளாட்சி தேர்தலை பாஜக இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
செப்டம்பர் மாதம் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், டிசம்பரில் அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளன. இதில் ஒரு மேயர், 10 நகராட்சி தலைவர்கள், 100 வார்டு கவுன்சிலர் பதவிகளை பிடிக்க பாஜக வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் அதிமுகவை கைகழுவி விட்டு தனித்து போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டன. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது அதிமுகவுக்கு சாதகம் என்றாலும் கூட பாஜக சார்பில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்த உதவும் என்கின்றனர் பாஜகவினர். ஆனால் இதை எல்லாம் தமிழக மக்கள் தான் தீர்மானிக்க உள்ளனர்.
newstm.in