1. Home
  2. தமிழ்நாடு

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிக சிறப்பு மிகுந்த பக்தி மாதம். தமிழ் மாதங்கள் உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும்.

ஆடிமாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, செவ்வாய் விரதம், ஆடி ஞாயிற்றுகிழமை என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும்.

சாக்த வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு ஆடி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்று அழைக்கப்பார்கள்.

பெரும்பான்மையான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள், மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு என பலவகையான முறைகளில் அம்மனுக்கு நேர்த்தி கடன்கள் செலுத்தப்படுகிறது.

கோடை காலம் முடிந்து பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களை நம்முடைய உடல் எதிர்கொள்ளும் விதமாக, நம்முடைய முன்னோர்கள் முன்னேற்பாடாக ஆடி மாதத்தில், கூழ் ஊற்றுதல், வேப்பிலை தோரணம் ,மஞ்சள் மணம் என ஏற்படுத்தியுள்ளார்.

பொதுவாகவே பெண்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளி என்பது கூடுதல் சிறப்பு. ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளி கிழமைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைக்கு இணையாக ஆடி மாத செவ்வாய்கிழமைக்கும் சிறப்புண்டு. ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசிக் குளித்து அம்மனுக்கு விரதம் மேற்கொண்டால், அவர்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் பெண்கள் ஒளவையார் அம்மனுக்கு விரதம் இருப்பார்கள். ஆண் குழந்தைகளைக் கூட அனுமதிக்காமல் இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வதுசிறப்பு.

ஆடிப் பெருக்கு

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு. நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு ஜீவாதாரமாக விளங்கும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும், இத்திருநாளில் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று காவிரி நதிக்கு பூஜை செய்து, சிறப்பு வழிபாடு நடத்துவர். இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு திருமணம் ஆகவும், திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் செழிக்கவும் வழிபாடு நடத்துவர். பெண்கள் புதிய மஞ்சள் பூசிய கயிற்றை கட்டிக்கொள்வர்.

காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் பச்சை வாழை இல்லை இட்டு அதில் காப்பரிசி, கருகமணி, வாழைப்பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை ஆகியவற்றை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.

ஆடி அமாவாசை

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

ஆடி அமாவாசை அன்று நம் முன்னோர்களின் ஆன்மாவை மகிழ்விக்கும் விதமாக அவர்களை நினைத்து புனித நீர் நிலைகளில் நீராடி, அவர்களுக்கு திதி செய்வது வழக்கத்தில் உள்ளது.

ஆடி கிருத்திகை

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

ஆடி கிருத்திகை நாள் முருக பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்நாளில் , முருகனின் அறுபடை வீடுகளான திருவாவினங்குடி(பழநி), திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர் மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ஆடிப்பூரம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திர நாளை ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். சைவர்களுக்கு,பார்வதி தேவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட நாள் இது என்ற நம்பிக்கை உள்ளதால், இந்நாளில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு வழிபாடுகளை நடத்துவர். மேலும் அன்று அம்மனுக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டு அந்த வளையல்கள் கோவில்களுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையலை குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அணிந்துக் கொண்டால் விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

சுமங்கலிப் பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகும். தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் தழைக்கவும் செல்வம் செழிக்க வேண்டியும் பெண்கள் இவ்விரதம் மேற்கொள்வர். ஒரு கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, ஒரு வெள்ளிக்காசு அல்லது பொற்காசினை இட்டு, மாவிலையை கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைத்து, கலசத்தை அம்மனின் முன்பு வைத்து விளக்கேற்றி பொங்கல், பருப்புவடை, பாயசம், கொழுக்கட்டை கொண்டு நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.

ஆடித்தபசு

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்..!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இக்கோயில் அம்பிகை தவமிருந்த அற்புத தலம். அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவனும் சங்கரநாராயணராக ஆடிபவுர்ணமியில் காட்சியளித்தார். ஆடித்தபசு என்னும் பெயரில் நடைபெறும் இவ்விழாவில் கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார்.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து நம் குலம் தழைக்கவும், ஊர் செழிக்கவும் வேண்டிக்கொள்வோம்

ஓம் சக்தி... பராசக்தி

Trending News

Latest News

You May Like