1. Home
  2. தமிழ்நாடு

ஆட்சியாளர்கள் ஏழைகளா… எத்தனை எம்எல்ஏக்கள் ஏழை..? : நீதிபதிகள் சரமாரி கேள்வி..!

ஆட்சியாளர்கள் ஏழைகளா… எத்தனை எம்எல்ஏக்கள் ஏழை..? : நீதிபதிகள் சரமாரி கேள்வி..!


“கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்” என, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகளுடன் குறிப்பிட்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மோசமான சாலைகளை மேம்படுத்திய பின்பு, சட்டப்படியும், உயர்நீதிமன்ற உத்தரவு படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான பேருந்துக்கு 58 லட்சம் ரூபாய் செலவாகும். தற்போது கொரோனா பாதிப்பும் நிதி பிரச்னையும் உள்ளதால், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படும். நாடு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளார்களா..? எத்தனை எம்எல்ஏக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்..? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Trending News

Latest News

You May Like