மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா? - ஆட்சியர்களுடன் இபிஎஸ் நாளை ஆலோசனை..
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் 4.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 445 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 14,821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,699 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மதுரையிலும் ஊரடங்கு அமலாகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது மாவட்ட அளவில் உள்ள கொரோனா பாதிப்பு, அதன் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மேலும் ஒருசில மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in