ஆல் பாஸ் முறை ரத்து... இது தமிழக பள்ளிகளுக்கு பொருந்துமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்வதென்ன..?
கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது.
இந்த புதிய விதியானது கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த அணுகுமுறையை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
குஜராத், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தோல்வியுற்ற மாணவர்கள் மேல் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழகம் முதலான மாநிலங்கள் இத்தகைய முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கத்தக்கது. ஹரியானா மற்றும் புதுச்சேரி இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த விதிகளுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் முயற்சி என கூறுகின்றனர். இதனால், பள்ளிகளில் டிராப் அவுட் எனப்படும் இடைநிறுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. கடந்த 1.4.2010-ல் அந்தசட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு கி.மீ. தொலைவுக்குள் அனைத்துக் குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே கல்வி உரிமைச் சட்டத்தின் முதன்மையான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன. தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல, ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வி தான் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் அடித்தளம். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் திராவிட மாடல் அரசின் இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்தியத் துணைக் கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து விளங்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச் செல்லும்” என்று கூறியுள்ளார்.