1. Home
  2. தமிழ்நாடு

அலர்ட் மக்களே...! இந்த சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு!

அலர்ட் மக்களே...! இந்த சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு!


ஐந்து மாநகராட்சிகளை தொடர்ந்து தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (26.04.20) முதல் நான்கு நாட்களும், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (26.04.20) மூன்று நாட்களும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுத்தம் செய்யும் பணிக்காக நாளை (26.04.20) ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு என அரசு அறிவித்துள்ளது. பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் பகுதிகளிலும், சிட்லப்பாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம், அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, திருநின்றவூர் பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 13 கிராம பஞ்சாயத்துகளும் புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 7 கிராம பஞ்சாயத்துக்களும், பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்பனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய 9 கிராம பஞ்சாயத்துகளுக்கும், மேலூர், சுப்புரெட்டிப்பாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் மற்றும் வெள்ளிவாயல்சாவடி ஆகிய 9 கிராமப் பஞ்சாயத்துக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like