விடாத கொரோனா.. அமிதாப் பச்சனிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த் !
கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்தார்.. ”எனது குடும்பத்தார் மற்றும் எனது பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
கடந்த 10 நாட்களுக்குள் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய மகனும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். பின்னர் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.
சக நடிகர்கள், அரசியல்வாதிகள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனைகளையும், நல்விருப்பங்களையும் தொலைபேசி மூலமும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமும் தெரிவித்துள்ளனர்.
newstm.in