14 வயது சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை.. தாய் உடந்தையுடன் அத்தான் செய்த கொடூரம் !
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுமி. குடும்பத்துடன் வசித்து வந்த அந்த சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் சிறுமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை அந்த சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடைசி நேரத்தில் இது தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் வேறுவழியின்றி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் புகாரளித்தார்.
மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் வெளியானது. அதாவது 14 வயது சிறுமியின் அக்காள் கணவர், சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் சிறுமி கர்ப்பமானதுடன், அதனையே காரணமாக்கி அக்காளின் கணவர் சிறுமியை 2ஆவது திருமணம் செய்துக்கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதற்கும் மேலாக இந்த கொடூரத்திற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் அக்காள் கணவர் மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in