பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் உறவினர்களால் கொலை !!
மாணவியை காதலித்த இளைஞரை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையை அடுத்த வாளமர்கோட்டை வாண்டையார் தெருவில் ஆனந்த் (21) என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ஐடிஐ படித்து முடித்துள்ள ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மாணவி ஆனந்த்-க்கு தூரத்து உறவுமுறை என்றும் ஆனால் தங்கை உறவு முறை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாணவியை காதலித்த ஆனந்தை மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் பகை உண்டாது. எனினும் பெரியளவில் இல்லையென கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவி காதல் விவகாரத்தை சூரக்கோட்டையை சேர்ந்த அந்த மாணவியின் அத்தை மகனான உதயகுமார் (25) கேள்விபட்டு மிகுந்த ஆத்திரம் அடைந்தார். இதனையடுத்து அவர், ஆனந்திடம் இந்த பழக்கம் தவறானது எனவும், மாணவியை தொந்தரவு செய்யாமல் அவளை விட்டு விலகிவிடுமாறும் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லணைக்கால்வாய் படித்துறையில் ஆனந்த் இருந்துள்ளார். அங்குசென்ற உதயகுமார், தனது அத்தை மகளை காதலிப்பதை கைவிடக்கோரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மண்வெட்டி கட்டையால் ஆனந்தின் பின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆனந்தை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உதயகுமார் மற்றும் மாணவியின் தந்தை ரவி ஆகிய இருவரையும் கைது செய்தார். கைதான இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை காதலித்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in