கொடநாடு காவலாளி கொலைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும்.. ! - சசிகலா ஆவேசம் !!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சசிகலாவிடம் காவல்துறை அதிகாரிகள் நேற்றும், இன்றும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணை முடிந்த நிலையில், சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கொடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறேன். முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறேன். கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம். அவர்களுக்கு நிறைய மன அமைதியையும் சந்தோசத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கொடநாடுதான். கொடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத் தான் பார்த்தேன். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படித்தான் பார்த்தார்கள். இதுபோன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையிலிருந்தேன். இந்தச் சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடைபெற்றிருக்கிறது.
இந்தச் சம்பவத்துக்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராகச் சந்தேகத்துக்குரிய வகையில் தொடர்ச்சியாக உயிரிழந்திருக்கிறார்கள். இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும், அவர் தாயும் பலியாகியுள்ளனர். எனவே, காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்தச் சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்கள் காவலாளி, பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவர் தாயார் ஆகியோர் மரணத்துக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும், என்று அந்த அறிக்கையில் சசிகலா குறிப்பிட்டிருக்கிறார்.
newstm.in