பாமகவின் அடுத்த தலைவர் இவரா..?: வெளியானது தகவல்..!
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் திருமண அரங்கில் நடைபெறுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், பாமகவின் அடுத்த தலைவர் பொறுப்பை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஏற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருவேற்காட்டில் வரும் 28-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணி பாமக சட்டமன்ற கட்சித் தலைவராக தொடர்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 மாவட்டங்களில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக் குழுவை அடுத்து அவருக்கு தலைமைப் பதவி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாமக பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், பாமகவின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.