அம்பேத்கர் படிப்பு என்னாச்சு..?: அரசிடம் கேட்கிறது ஐகோர்ட்..!
பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனித்துறை அமைக்க 2006-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி குழுமம் புதிய துறையை துவங்க ஒப்புதல் அளித்தது. 2008-ம் ஆண்டு அம்பேத்கர் படிப்புகள் துறை அமைக்க பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்பின் இந்த புதிய துறையை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழகம், பல புதிய துறைகளை துவங்கியுள்ளது. ஆனால், அம்பேத்கர் படிப்புகள் துறையை துவங்கக்கோரி மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எனது விண்ணப்பங்களை பரிசீலித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் துறையை துவங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, பல்கலைக் கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.