தமிழகத்தில் உஷார்.. கேரளாவில் நுழைந்த கொரோனா எக்ஸ் இ தொற்று !
உலகையே மிரட்டிய புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் முதன் முதலில் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா எக்ஸ் இ எனப்படும் புதிய வகை தொற்று தற்போது சீனாவில் பரவி வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்த அங்கு மீண்டும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் இந்நோய் தாக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் முதன்முதலாக கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து ராஜீவ்காந்தி பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த தொற்று கொரோனா எக்ஸ் இ வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார். நோய் பாதிப்புக்கு உள்ளான இளைஞரின் பயண விபரம், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கேரளாவில் கொரோனா எக்ஸ் இ பரவலை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக கொல்லம் பகுதியில் வீடு,வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
newstm.in