தொடரும் சோகம்..!! தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பறிபோன மற்றொரு உயிர்..!!
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு, வரலட்சுமி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பெயிண்டிங் தொழிலில் சிரியான வருமானம் இல்லாத காரணத்தால், ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பெருமாளுக்கும் அவரது மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், பெருமாள் தான் பயன்படுத்தி வந்த செல்போனை, அடகு வைத்து விட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு தூங்க சென்ற கணவரை, அவரது அறையில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி துடித்துள்ளார்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் மணலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெருமாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து மணலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணலியை சேர்ந்த பவானி என்பவர், தனது 20 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் அறங்கேறி வருகிறது. இந்த ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்தில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டத்தை உருவாக்கச் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.