தூத்துக்குடியில் சோகம்.. வீடு இடிந்து விழுந்து நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பேர் பலி..!
தூத்துக்குடி, அண்ணா நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன். இவர், மாநகராட்சி கழிவறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி காளியம்மாள் (47).
இந்த தம்பதியின் ஒரே மகள் கார்த்திகா (21). கார்த்திகாவை, விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியாக இருந்த கார்த்திகாவுக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரை தாய் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று (2-ம் தேதி) இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று (3-ம் தேதி) அதிகாலை, திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், கர்ப்பிணியான கார்த்திகா மற்றும் அவருடைய தயார் காளியம்மாள் இருவரும் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயம் அடைந்த முத்துராமனை சிகிச்சைக்காகவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையான கான்கிரீட் வீடு. வீட்டின் மேல் பகுதியில், பழைய ஓடுகளை அடுக்கி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஈர நிலையில் இருந்த ஓடுகளின் பாரம் தாங்காமல் மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது.
மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.