ரம்ஜான் கொண்டாட்டத்தில் சோகம்.. டூவீலர் மீது லாரி மோதல்.. 2 இளைஞர் பலி..!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரம்ஜான் கொண்டாடி திரும்பிய 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகினர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ஒற்றாமரம் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் செய்யது அலி (25), படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் சிபின் (24).
செய்யது அலி மெக்கானிக்காகவும், சிபின் ஸ்டுடியோவிலும் வேலை பார்த்து வந்துள்ளனர். நண்பர்களான இருவரும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று மலையோர கிராமமான நெட்டா பகுதிக்கு சென்றுள்ளனர்.
மாலையில், இருவரும் இருசக்கர வாகனத்தில் களியக்காவிளைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வைகுண்டம் என்ற இடத்தின் அருகே வந்தபோது, அருமனை அருகே உள்ள சங்கரன்கடவு என்ற இடத்தில் இருந்து ரப்பர் மர தடிகளை ஏற்றி கொண்டு கேரளா நோக்கி சென்ற ஒரு லாரி இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செய்யது அலி, சிபின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையாலுமூடு போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.