புகையிலை விளம்பரம் – மன்னிப்பு கோரினார் பிரபல நடிகர்!!
பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்ததை அடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்சய் குமார் நடிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்தில் கலந்து கொள்ளாத நடிகர். ஆரோக்கியத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர்.
அதே போல, புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பான் மசாலா பயன்படுத்துவது போன்ற பழக்கமும் அக்சய் குமாருக்கு கிடையாது. இதனை பல முறை அவரே தனது பேட்டிகளில் கூறியுள்ளார். தனது ரசிகர்களையும் கெட்ட பழக்கங்களில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்.
சிகரெட், மதுபான விளம்பரங்களிலும் அக்ஷய் குமார் நடித்ததில்லை. ஆனால், இத்தனை வருடங்களாக தான் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயர்கள் அனைத்தையும் ஒரே விளம்பரத்தில் காலி செய்து விட்டார்.
விமல் என்ற குட்கா நிறுவனத்தின் 'பான் மசாலா' விளம்பரத்தில் அக்ஷய் குமார் நடித்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அந்த விளம்பரத்தில் அக்சய் குமார் மட்டுமின்றி நடிகர்கள் ஷாருக் கானும், அஜய் தேவ்கனும் நடித்திருக்கின்றனர். ஒருசில தினங்களுக்கு முன்புதான் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.
விளம்பரம் வெளியான நாளில் இருந்து நடிகர் அக்ஷய் குமாரை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர். மேலும், அவரை கடுமையாக ட்ரோலும் செய்து வந்தனர்.
இதனால், புகையிலை விளம்பரத்திலிருந்து பின்வாங்குவதாக அக்ஷய் குமார் அறிவித்துள்ளார். இந்த விளம்பரத்திற்காக, தனக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை, நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், விளம்பரங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்படுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in