1. Home
  2. தமிழ்நாடு

இது போன்று இனிமேல் நடக்கக் கூடாது.. மாணவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை..!

இது போன்று இனிமேல் நடக்கக் கூடாது.. மாணவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை..!


“அரசுப்பள்ளிகளில் ஆசிரியரை தாக்க முற்படுவது, அங்கிருக்கும் பொருட்களை உடைப்பது போன்ற செயல்களை மாணவர்கள் ஈடுபடுவது சட்டப்படி குற்றம்; இது போன்ற செயல்கள் இனிமேல் நடக்கக்கூடாது” என தமிழக டிஜிபி எச்சரித்துள்ளார்.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இரண்டு காணொளிகளைப் பார்த்தேன். அதில், அரசுப் பள்ளியில் மாணவர் ஒருவர் ஆசிரியரை தாக்க முற்படுவது போல் இருந்தது. இன்னொரு காணொளியில், வகுப்பில் இருக்கக் கூடிய டேபிள், சேர் போன்ற பொருட்களை உடைத்தனர்.

இதனைப் பார்க்கும்போது பாரதியார் கூறியதைப் போல நெஞ்சு பொறுக்குதில்லையே என்பது தான் நினைவுக்கு வந்தது. மாணவர்களே, நானும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.

நம் பெற்றோர் ஏன் நம்மை அரசுப் பள்ளிக்கு அனுப்பினார்கள். அவர்களிடம் அதிகமான வருமானம் கிடையாது; சொத்துக்கள் கிடையாது.

உங்கள் அப்பா - அம்மாவுக்கு சொத்து இல்லை. உங்களுக்கு நிறைய சொத்து இருக்கிறது. நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளிதான் உங்கள் சொத்து. அங்கிருக்கும் விளையாட்டு மைதானம்தான் உங்கள் சொத்து. அந்த வகுப்பறைதா உங்கள் சொத்து.

நாங்கள் படிக்கும் போது பெஞ்ச், டேபிள் கிடையாது; தரையில் அமர்ந்துதான் படிப்போம். இப்போது அரசு உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறது. அதை நீங்கள் உடைக்கிறீர்கள். அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தான் நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன்.

ஆசிரியரை அடிக்க மாணவன் கை ஓங்குவது வேதனை அளிக்கிறது. ஏன் இது போன்று நடக்கிறது..? ஆசிரியர்கள் தான் நமக்கு அனைத்தையும் கற்பித்தவர்கள். ஆசிரியர்கள் தான் நமக்கு மிகப் பெரிய ஆதாரம். அவர்கள் தான் மிகப்பெரிய சொத்து.

அறிவு செயல்திறன் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய மாணவர்கள், வன்முறைச் செயலை ஏன் செய்கிறீர்கள்..? இது, நமது வீட்டையே நாம் கொளுத்துவது போல் இருக்கிறது. நம் கைகளை நாமே வெட்டிப் போடுவது போல் இருக்கிறது.

தயவுசெய்து மாணவர்கள் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். பள்ளிக்கு மிகப்பெரிய நோக்கத்தோடு நாம் வருகிறோம்.

ஒரு நல்ல மனிதனாக, சிந்தனை மிக்க மனிதனாக வளர வேண்டிய மாணவர்கள், பள்ளிக்கூடத்திற்கு மரியாதை கொடுக்கவேண்டும், ஆசிரியர்களை உயர்வாக மதிக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் இதுபோன்ற வன்முறைகள் சட்டப்படி குற்றம். சட்டம் மாணவர்களுக்கு சில பாதுகாப்பை கொடுத்திருந்தாலும் இது குற்றமாகக் கருதப்படும். எனவே, இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம்” என பேசியுள்ளார்.

Trending News

Latest News

You May Like