1. Home
  2. தமிழ்நாடு

வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது.. நீட் தேர்வை ஒத்திவைங்க.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது.. நீட் தேர்வை ஒத்திவைங்க.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!


“திட்டமிட்டபடி நீட் தேர்வுகள் 21-ம் தேதி நடத்தப்பட்டால், பல மாணவர்களுக்கு வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது. எனவே, முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்” என்று, அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மே 21-ம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மருத்துவ மாணவர்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளன. அந்த கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மிகவும் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால், மாணவர் சேர்க்கை தாமதமாகக் கூடும்.

கலந்தாய்வு தாமதமானதால், 2021-ம் ஆண்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களால் 2022-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. திட்டமிட்டபடி நீட் தேர்வுகள் 21-ம் தேதி நடத்தப்பட்டால், பல மாணவர்களுக்கு வெற்றி பெற சமவாய்ப்பு கிடைக்காது.

நீட் தேர்வை சில வாரங்கள் ஒத்திவைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதிதான் நீட் தேர்வு நடைபெற்றது.

எனவே, மாணவர்கள் நலனே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான முதுநிலை மருத்துவ நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் ஒத்திவைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like