டாஸ்மாக் கடைக்கு தீ வைத்துவிட்டு தானும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பாமக பெண்..!!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ‘டாஸ்மாக்’ கடை அமைந்துள்ளது. இந்த மதுக்கடை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கோரி தொடர் புகார்கள் எழுந்தன.
ராமநாதபுரம் ஆதம்நகரை சேர்ந்த ஜமீன்கான் என்பவருடைய மனைவி ஆயிஷா (வயது 40). பாமக மாவட்ட பொருளாளரான இவர், இந்த மதுக்கடையை அகற்றக்கோரி மனு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கடையில் மதுக்குடித்த சிலர், அந்த வழியாக வந்த கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயிஷா நேற்று பிற்பகலில் ராமநாதபுரம் வந்து, திடீரென அந்த மதுக்கடை வாசல் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால் கடையின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்ததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் கடையில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை உடனடியாக அணைத்துவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது மதுக்கடையை உடனடியாக அகற்றக்கோரி கோஷமிட்ட ஆயிஷா, தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் ஆயிஷாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தீக்குளிக்க முயன்ற ஆயிஷா உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஆயிஷா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.