சாலையில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்த பசு.. மயக்க மருந்து செலுத்தி பிடித்த அதிகாரிகள்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில், பசு மாடு ஒன்றை வெறிநாய் கடித்துள்ளது. இதையடுத்து அந்த பசுமாடு வெறிபிடித்து சாலையில் செல்வோரை துரத்திச் சென்று முட்டுவதும், கடிப்பதுமாக இருந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில், வெறிபிடித்து திரிந்த பசுவை பிடித்து அப்புறப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அத்தனையும் தோல்வியில் முடிந்ததால், அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கிராம இளைஞர்களின் துணையோடு அந்த பசுவுக்கு மயக்க மருந்து செலுத்தி பிடித்து சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.