மாணவிகளை பள்ளிக்குள் பூட்டிவைத்த ஆசிரியர்கள்! காரணம் இதுதான்!!
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இரண்டு பேர் மாணவிகளை பள்ளிக்குள் பூட்டி வைத்து பிளாக் மெயில் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பெஹ்ஜாம் பகுதியில் கஸ்தூரிபா காந்தி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பெண்கள் பள்ளியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவியரை அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் ஒரு அறையில் வைத்து பூட்டினர்.
பள்ளியைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிட மாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, தங்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், மாணவிகளை பள்ளிக்குள் வைத்து பூட்டி பிளாக் மெயில் செய்தனர். இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிய வரவே, உள்ளூர் காவல்துறை மூலம் சில மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மாணவிகளை மீட்டனர்.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மனோரமா மிஸ்ரா மற்றும் கோல்டி கட்டியார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அதேபோல், கல்வி துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in