தஞ்சை விபத்து : பிரதமர், முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!!
தஞ்சையில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தலா 2 லட்ச ரூபாயும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 5 லட்ச ரூபாயும நிவாரணம் அறிவித்துள்ளனர்.
தஞ்சை அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது, தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில், மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததாகவும், அதனால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
களிமேடு அப்பர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். மின் கம்பத்தில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கோர சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் நேரில் செல்வதுடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளளார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அதே போல் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
newstm.in