தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி..!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடான இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என, தமிழக சட்டசபையில் கடந்த 29-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட நன்றி.
இந்த மனிதாபிமான நடவடிக்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும். மேலும், இரு நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.