1. Home
  2. தமிழ்நாடு

தீவிர நடவடிக்கை எடுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!

தீவிர நடவடிக்கை எடுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு..!


தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “இந்த கூட்டம் கொரோனா தொடர்பாக காணொலி காட்சி மூலம் நடத்தப்படும் ஆலோசனை கூட்டமாக அமைந்திருக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுங்கள்- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு || Tamil News Chief ...
இந்த அரசு பொறுப்பேற்றபோது கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்ததை நீங்கள் எல்லாம் நன்றாக அறிவீர்கள்.

அந்த இக்கட்டான நிலையில் தேவைப்படக்கூடிய அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்து அதை உங்களுடைய கடும் உழைப்பினால் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதனால் ஏற்பட இருந்த பெரும் பாதிப்புகளையும் பெருமளவு நாம் குறைத்திருக்கிறோம்.

கடந்த 2021 ஜனவரி மாதம் நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணியில் இருந்த சுணக்கத்தை முழுமையாக அகற்றி தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக நாம் மாற்றிக் காட்டி இருக்கிறோம்.

அதில், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பங்கு மிகவும் மகத்தானது. அதை யாராலும் மறக்க முடியாது. இதன் விளைவாகத்தான் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியான 6.33 கோடி மக்களில் 74.75 சதவீதம் பேருக்கு 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 91.5 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுள்ள 41.66 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் காரணமாக ஏற்பட்ட 3-வது அலை பெருமளவில் இல்லை.

இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்தாலும் கூட இந்த தொற்று பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்பி வருகிறோம்.

பொருளாதாரம் மெல்ல வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு வாரமாக மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் வைரசின் புதிய வகையால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஒமைக்ரான் வைரசால் தொற்று எண்ணிக்கை உயர்ந்த போது ஏற்பட்டது போன்றே தற்போது உயிரிழப்புகள் எண்ணிக்கை உயரவில்லை. இருந்தாலும் நாம் அனைவரும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தி இருக்கிற அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்த நம் வசம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசியே ஆகும். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டாலும் கூட உயிரிழப்பு ஏற்படுவது மிக குறைவு.

எனவே தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதே நமது தேவையான கடமையாக இருந்துவிட வேண்டும். நமது மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்த போதிலும் இன்னும் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நமது சாதனை சற்று குறைவாகத்தான் அமைந்திருக்கிறது.

இன்னும் குறிப்பிட்டு சொன்னால் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் நமது மாநிலத்தில் 1.48 கோடி பேர் இருக்கிறார்கள். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி இருந்தும் அதை போட்டுக்கொள்ளாதவர்கள் இன்னும் 11.6 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே நம் முன்பு இருக்கக்கூடிய சவாலாக அமைந்திருக்கிறது.

அடுத்து பெருந்தொற்றை தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் பொது இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவதை நீங்கள் அனைவரும் உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு பொருளாதார வளர்ச்சி தடைபட்டு விடாமலும், மக்களின் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்பட்டு விடாமலும் இருப்பதை உறுதி செய்யக்கூடிய அதே நேரத்தில் எதிர்காலத்தில் இந்த பெருந்தொற்றினால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்திட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே நம் குறிக்கோளாக அமைந்திட வேண்டும்.

அதை மனதில் நிறுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அனைத்து அரசு துறைகளும், மாவட்ட ஆட்சியர்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற எனது வேண்டுகோளை இந்த தருணத்தில் மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Trending News

Latest News

You May Like