தனி பட்டாவாக மாற்றித் தர லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கினார் சர்வேயர்..!
கரூரில், கூட்டுப் பட்டாவை தனிப் பட்டாவாக மாற்றித் தருவதற்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கரூர் மாநகரம் எல்.வி.பி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர், தனது தாயார் புஷ்பராணி பெயரில் தோரணக்கல்பட்டி வருவாய் கிராமத்தைச் சேர்ந்த ராயனூர் பகுதியில் இருக்கும் கூட்டு பட்டாவை தனி பட்டாவாக கேட்டு நில அளவையர் ரவி (38) என்பவரிடம் 6 மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்தார்.
நாட்கள் பல கடந்ததால், சில தினங்களுக்கு முன்பு கூட்டுப் பட்டாவை தனி பட்டாவாக மாற்றி அமைப்பதற்கான பணியை விரைந்து முடித்து தருமாறு ரவியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு, நில அளவையர் ரவி 8,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன், இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆலோசனையின்படி, 5,000 ரூபாயை லஞ்சமாக ரவியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கரூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நடராஜன், ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான போலீசார், நில அளவையர் ரவியை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.