“சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்” : முதலமைச்சர்!!
பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர், சட்டத்தின் குரலாக மட்டுமல்ல, மக்களின் குரலாகவும் பலநேரங்களில் ஒலிக்கக் கூடியவராக நம்முடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் பொன்னாவரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்றைய நாள் இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசராக அவர் உயர்ந்து நிற்கக் காரணம், இந்திய மக்களின் மனசாட்சியின் குரலாக அவர் இருக்கின்ற காரணம் தான்.
நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்திற்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூபாய் 7 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என்றார்.
newstm.in