1 முதல் 9-ம் வகுப்பு வரை நாளை முதல் கோடை விடுமுறை.. ராமதாஸ் கோரிக்கை..!
“மாணவர்கள் நலன் கருதி, ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்” என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் 8 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து தகிக்கிறது.
மே மாதம் 4-ம் தேதி முதல் தொடங்கும் கத்திரி வெயில் காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சென்னையில் 44 டிகிரி செல்சியசையும், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 46 டிகிரி செல்சியசையும் தாண்டக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், பள்ளிகளை மே 13-ம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன..? இது வறட்டுப் பிடிவாதமாகவே பார்க்கப்படும். கொரோனா நான்காவது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியதால் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.
அதேபோல், இப்போதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளின் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் அவ்வாறு தான் செய்யப்பட்டிருக்கிறது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மே 2-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கவிருக்கிறது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி, ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.