கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. துணை நடிகை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் !!
துணை நடிகையிடம் நகை, பணம் பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக கொள்ளையர்கள் கத்திமுனையில் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் 35 வயதான துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர், பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். கணவரை பிரிந்து சென்றதால் தற்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர், துணை நடிகையின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் கத்திமுனையில் மிரட்டி துணை நடிகையிடம் 10 கிராம் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறித்தனர். மேலும் நடிகையை ஆபாசமாக செல்போனில் வீடியோவும் எடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுபற்றி துணை நடிகை அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வளசரவாக்கத்தை சேர்ந்த செல்வக்குமார் (22), அவரது நண்பரான கண்ணதாசன் (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததால் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர் அதாவது, வீட்டிற்குள் புகுந்த இருவரும் துணை நடிகையை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும், கைதான கண்ணதாசன் துணை நடிகைக்கு ஏற்கனவே பழக்கமானவர் ஆவார். அடிக்கடி துணை நடிகை வீட்டுக்கு சென்று அவருக்கு மீன் வாங்கி கொடுப்பார். அப்போது துணை நடிகை மட்டும் வீட்டில் தனியாக இருப்பதையும், அவரிடம் நகை, பணம் அதிகளவில் இருப்பதையும் தெரிந்து கொண்டார்.
தனக்கு பணம் தேவைப்பட்டதால் துணை நடிகையிடம் நகை, பணத்தை பறிக்கும் நோக்கத்தில் சம்பவத்தன்று கண்ணதாசன், தனது நண்பரான செல்வக்குமாரை அழைத்துக்கொண்டு நடிகையின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு கத்திமுனையில் துணை நடிகையை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இதனை வெளியே சொல்லாமல் இருக்க துணை நடிகையை தங்கள் செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்துவிட்டு, அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறித்து சென்றுவிட்டனர். தற்போது நடிகை அளித்த புகாரில் 2 பேரும் கைதாகி உள்ளனர். துணை நடிகையை வீட்டிற்குள் புகுந்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in