அதிர்ச்சி.. நடிகர் விஜய் அலுவலகத்தில் உயிரிழந்து கிடந்த இளைஞர்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகம். இங்குதான் தனது மக்கள் இயக்கத்தினரை சந்திப்பதை நடிகர் விஜய் வழக்கமாக கொண்டுள்ளார். அதோடு தனக்கு பிடித்தமானவர்களுக்கு விருந்து அளிப்பது போன்றவற்றையும் விஜய் பனையூரில் உள்ள வீட்டில் தான் நடத்துவார்.
இதனால் விஜயின் பனையூர் பங்களா வீடு, அலுவலகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் பனையூர் அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இங்கு வேலை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்(34), நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வருகிறார்.
சனிக்கிழமையன்று சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காண பழைய வண்ணாரப்பேட்டைக்குச் சென்ற பிரபாகரன் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்க்கு வந்துள்ளார். அங்கிருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும், பரோட்டா வாங்க 100 ரூபாய் தரும்படி கேட்டு பெற்றுக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை அவருடன் வேலைபார்க்கும் சக பணியாளர்கள் வேலைக்கு வந்தபோது, அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் பிரபாகரன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த போலீசார் அவரது உடைலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். எனினும், வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து உடற்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
newstm.in