ரயில்வே பணியிடங்களுக்கு தேர்வு.. தமிழர்கள் அலைகழிப்பு !
தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு பணிகளில் தமிழகர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வருகிறது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு நீண்டகாலமாக இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். பெரும் போராட்டமும் அவ்வப்போது நடக்கிறது.
எனினும் வங்கிகள், தபால் நிலையங்கள், ரயில் நிலையங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் பணியில் உள்ளனர். அவர்களுக்கு மொழி பிரச்சனை இருப்பதால் அவ்வப்போது தகராறு ஏற்படும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் விரைவில் நடைபெறவுள்ள ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணி நியமனங்களுக்கான தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
மே 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்வு மையங்கள் அலகாபாத், மைசூர், ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாவார்கள்.
ஆகவே தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் தேர்வு மையங்களை அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதற்காக சென்னை ரயில்வே நியமன வாரியத்துக்கு உரிய ஆணை பிறப்பிக்குமாறும் டி.ஆர்.பாலு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in