புஷ்பா பட பாணியில் ரூ.7 கோடி மதிப்பில் செம்மரக்கட்டை கடத்தல்!
தூத்துக்குடியில் இருந்து மலேசியாவுக்கு கடத்தப்பட இருந்த 7 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியிலிருந்து மலேசியா போர்ட் கிலாங் துறைமுகத்திற்க்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி சிப்காட் அருகில் உள்ள தனியார் சரக்கு பெட்டி முனையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் திருப்பூர், ராதாகிருஷ்ணன் நகர், பிச்சம் பாளையம் என்ற முகவரியில் உள்ள தனியார் நிறுவனம் இரும்பு பைப்புகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த மரப்பெட்டிகளை சோதனையிட்டனர்.
அதில் முன் பக்கத்தில் உள்ள பெட்டிகளில் மட்டும் இரும்பு குழாய்களை வைத்து பின்புறம் முழுவதும் செம்மரக்கட்டைகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்ததது.
இதனையடுத்து ஏற்றுமதிக்காக வைத்திருந்த 12 டன் எடையுடைய 9 மரப்பெட்டிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவரையும், சரக்குகளை ஏற்றி வந்த லாரி டிரைவரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
newstm.in