மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. தமிழகத்திலும் அதிரடி உத்தரவு !
தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 50க்கும் கீழ் தினசரி கொரோனா பாதிப்பு இருந்தாலும் சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் சென்னை ஐஐடியில் மட்டும் தற்போது முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.
newstm.in