பெண் எஸ்ஐ-க்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் நேற்று இரவு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அதன் பாதுகாப்பு பணிக்கு பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உள்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர்.
விழா முடிந்த பிறகு அங்கு வைக்கட்டு இருந்த பிளக்ஸ் போர்டுகளை அகற்றும் போது ஆறுமுகம் என்பவருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆறுமுகம், திடீரென காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை சக காவலர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கைப் பதிவு செய்தது எஸ்ஐ மார்க்கரேட் திரேஷாதான் என்று சொல்லப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆறுமுகம் கத்தியால் குத்தியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்ஐ மார்க்கரேட் திரேஷா பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடம் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், நெல்லையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான பெண் எஸ்ஐ மார்க்கரேட் திரேஷாவுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.