நிவாரண நிதி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
திருச்சியில் நடைபெறும் வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: “வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்து பல்வேறு உதவிகளை செய்தது திமுக அரசு. வணிகர்கள் நலனை காப்பதில் மிகவும் அக்கறை கொண்ட அரசு திமுக. தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர்தான்.
கொரோனா எனும் நெருக்கடியான காலகட்டத்தில் அரசுக்கு நிதியுதவி வழங்கிய வணிகர்களை பாராட்டுகிறேன். இலங்கையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்கான முயற்சிகளை நாம் தொடங்கி உள்ளோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளோம்.
அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவு வரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டார்கள். வணிகர்களின் நலன் காக்கப்பட்டதால் தான் அரசுக்கு வரும் வருவாய் காக்கப்படும்.
வணிகர்கள் இறந்தால் நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்தால் போதும். பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களின் கருத்துக்களை கேட்டது திமுக அரசுதான்.
ஊரடங்கு நேரங்களில் கடைகளை திறக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டது. சிறு குறு வணிகர்களுக்கு கொரோனா காலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. வணிகர்களின் நலன் நிச்சயமாக பாதுகாக்கப்படும்” என்று அவர் கூறினார்.