அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.. காவலர்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!
புதுச்சேரி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று மாலை நடந்தது.
இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: “புதுச்சேரி காவல்துறையில் கடந்த 2015-ல் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு தற்போது தான் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதில் வயது வரம்பு கடந்ததால் பலருக்கு வருத்தம் உள்ளது. காவலர் தேர்வு நியாயமான முறையில் நடந்துள்ளது. காவலர் வேலை கடினமான பணி. காவல்துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும். காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக திகழ வேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
இளநிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள், 125 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களும் அறிவித்தப்படி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்.
புதுவை மாநிலத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் வேலை வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.