மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைது..!
சேலம் பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் பிரேம்குமார்.
இவர், தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி சாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசியதாக பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வரலாற்றுத்துறை மாணவி ஒருவர் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சாதிய வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் சேலம் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சூரமங்கலம் மகளிர் போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர்.