ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!
தமிழகத்தில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 3,000 ரூபாயை 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். அப்போது, “மஞ்சள் பை திட்டத்தால் தமிழகத்தில் 20% வரை பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் சுற்றுச்சூழல் துறை சார்பில் 1,000 மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும். காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்.
பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், நெகிழி இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் நெகிழி இல்லா வளாகங்களை ஊக்குவிக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
கடற்கரைக்கு நீலக்கொடி சான்று பெறுவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நீலக்கொடி சான்று பெறுவதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.