ஓபிஎஸ், ஈபிஎஸ் உடனே பதவி விலக வேண்டும்.. கட்சிக்குள் வலுக்கும் கோரிக்கை !!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு திரட்டும் முயற்சியில் இருவரும் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசி ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பகீரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறினார்.
இதனிடையே, இருவரும் தனித்தனியே ஆலோசனை, பின்னர் சமாதானம் படுத்தும் முயற்சியில் மற்ற மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் பதவி, முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சியில் அதிகார பதவியான ஒருங்கிணைப்பாளரில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு இடம் என அனைத்தையும் விட்டுக்கொடுத்தேன், ஆனால் இந்த முறை பொதுச்செயலாளர் பதவி வந்தால் விட்டுக்கொடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி கோவை விளாங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சண்டையிட்டு கொள்வது சரியல்ல. உள்ளாட்சி தேர்தலை அதிமுக ஆட்சியிலேயே நடத்தி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. தற்போது அதிமுக இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சண்டையிட்டு கொள்வது சரியல்ல. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் அமர்ந்துள்ளனர். அவர்கள் உடனடியாக விலக வேண்டும். தொண்டர்களின் ஆலோசனையை இருவரும் கேட்பதில்லை.
நல்ல முறையில் கட்சியை வழி நடத்துவார்கள் என்று நினைத்து பலர் ஒதுங்கியுள்ளனர். ஆனால் இருவரும் சண்டையிட்டுக்கொள்கின்றனர். இருவரும் பதவி விலக வேண்டும். புதிதாக வருபவர்கள் அதிமுகவை வழிநடத்தட்டும். மூத்த தலைவர் அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கியது தவறு. முடிந்தால் இருவரும் இணைந்து என்னையும் நீக்குங்கள்.
சசிகலா தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவியை வழங்கினார். ஆனால் அவருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். சேலம், பெரியகுளம் என இருவருக்கும் ஆதரவாக போஸ்டர் அடித்து ஓட்டி வருகின்றனர். ஆனால் இருவருக்கும் யாருமே ஆதரவு கிடையாது. அதிமுகவில் ஒற்றை தலைமை என்பதே சொல்லி கொடுத்து பேசுவது தான், என அவர் கூறினார்.
newstm.in