உழைப்பாளர் தினத்தில் ஊர்வலம் நடத்தக் கூடாது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஊர்வலம், பேரணிகள் நடத்தப்படுவதால் நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக, பெங்களூருவில் ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது என்று கர்நாடக ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உழைப்பாளர் தினமான நாளை (மே 1-ம் தேதி) காலை பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா (சிட்டி) ரயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு பிரமாண்ட ஊர்வலம் நடத்த தொழிலாளர்கள் சங்கங்கள் முடிவு செய்திருந்தனர்.
இதையடுத்து, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதிகளான தேவதாஸ், ஹேமலேகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உழைப்பாளர் தினத்தில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பெங்களூருவில் ஊர்வலம், பேரணி நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ரயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்த சாத்தியமில்லை. அந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.