5 வயது வரை கட்டணம் கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு..!
“5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இனி அரசுப் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது” என, போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று முடிந்த பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலுரை ஆற்றுகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், “வரும் 12-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும். ஏற்கனவே மூன்று வயது குழந்தைகளுக்கு அரசுப் பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படாதிருந்த நிலையில், இனி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்தில் கட்டணம் வசூலிக்கப்படாது.
மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதை தடுப்பதற்கு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு பயணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.