புதிய திட்டம்! காலி மதுபாட்டில்கள் கொடுத்தால் பணம்!!
நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ஆம் தேதி அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.
பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும், தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மே 15ஆம் தேதி சோதனை அடிப்படையில் அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்ததாக டாஸ்மாக் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மசினக்குடியில் தனியார் ஹோட்டல்கள், மதுபானங்களை பாட்டிலுடன் விற்பனை செய்வதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.
newstm.in