கொலை வழக்கு.. தகவல் அளித்தால் ரூ.50 லட்சம்.. காவல்துறை தகவல்..!
கடந்த 2012-ம் ஆண்டு, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல், மார்ச் 29-ம் தேதி கல்லணை செல்லும் சாலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டு, கம்பிகளால் கட்டி காட்டில் வீசப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் 12 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், பெரிதும் பலனளிக்காததால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
பின்னர், தமிழக காவல்துறையே இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ‘அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிதாக துப்பு கிடைத்துள்ளது. எனவே, விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம்’ என்று உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்படவுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய உயர் நீதிமன்றம், ஜூன் 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.