சென்னையை தொடர்ந்து மதுரை.. பயணிகள் கடும் அதிர்ச்சி..!
டிராக்டர்கள் ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் 25 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் கூடல் நகர் பகுதியில் இருந்து மதுரை ரயில் நிலையத்திற்கு பராமரிப்பு பணிக்காக வந்து கொண்டிருந்தது.
செல்லூர் அருகே வந்தபோது, திடீரென அந்த ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது. இதையடுத்து, அந்த ஒரு பெட்டி கழற்றி விடப்பட்டு மற்ற 24 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டது. கழற்றி விடப்பட்ட பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், மதுரையில் இருந்து 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய குருவாயூர்-சென்னை விரைவு ரயில் 2 மணி 43 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டுள்ளது.
இதேபோன்று, மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், ரயில் புறப்படும் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து மதுரை கோட்ட மேலாளர் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நேற்று, பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி கட்டிடத்தில் மோதி நின்றது.
இந்நிலையில், இன்று மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவங்கள் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.