கொடநாடு வழக்கு.. சசிகலாவை தொடர்ந்து ஈபிஎஸ்க்கு நெருக்கமான அதிமுக நிர்வாகியிடம் விசாரணை !!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் தனிப்படை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ளது. ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் சென்னையில் சசிகலாவிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்டனர். சசிகலாவிடம் இருதினங்கள் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு தனிப்படை போலீசார் கோவை திரும்பினார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் அதிமுக வர்த்தக அணியைச் சேர்ந்த சஜீவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காலை 11 மணிக்கு துவங்கிய விசாரணை 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
கொடநாடு பங்களாவை பொறுத்த வரை மிக நுட்பமாக அனைத்து விசயங்களும் தெரிந்தவர் சஜீவன். ஜெயலலிதா உயிருடன் இருந்தபொழுது கொடநாடு பங்களாவில் உட்புற அலங்கார பணிகள், மரவேலைப்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டவர் என கூறப்படுகிறது.
மேலும் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்த விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதே அவருக்கு அதிமுக வர்த்தக அணியில் எடப்பாடி பழனிச்சாமி மாநில அளவிலான பொறுப்புகளும் வழங்கியிருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினருடன் சஜீவன் நெருக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
மேலும் சசிகலாவிடம் விசாரணை நடத்திய பின்னர் முதல் நபராக சஜீவனை தனிப்படை போலீசார் அழைத்து விசாரணை நடத்துவதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி ,அவரது மகன் அசோக் ,தம்பி மகன் பாலாஜி மற்றும் உதவியாளர் ஆகியோரிடமும், அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் அனுபவ் ரவியிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.
newstm.in