கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழா.. பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு..!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (26-ம் தேதி), தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கருணாநிதி செய்த சாதனைகளை பட்டியலிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “கைம்பெண் மறுமண நிதி உதவி, மகளிர் சுய உதவி குழுக்கள், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தந்தவர் கருணாநிதி. மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.
வி.பி சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்களால் பாராட்டப்பட்டவர் கருணாநிதி. கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு நடுவே கருணாநிதி சிலை அமைக்கப்படும். கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அந்த சிலையின் திறப்பு விழா நடைபெறும்” என்று அறிவித்தார்.